ஆதாரம் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அபராதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆதாரம் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆதாரம் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அபராதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரியும், அதுபோன்று வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாத அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம் விதிக்கப்படும்

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, கவர்னர் மற்றும் சென்னை ஐகோர்ட்டுக்கு மனு அனுப்பி உள்ள விவரத்தை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால், சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக வேறு எந்தவொரு ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எந்தெந்த இடங்களில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது, எந்தெந்த அதிகாரி தவறு செய்தார் என்ற விவரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.

எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com