பாம்பு கடித்ததாக பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதி

பாம்பு கடித்ததாக பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாம்பு கடித்ததாக பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதி
Published on

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கிட்டங்கிக்கு தனி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கட்டிடத்துக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசாரான ரத்னா, பிரியா(வயது 27) ஆகியோர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரியா தனது படுக்கை விரிப்பை எடுத்து உதறியுள்ளார். அப்போது ஒரு பாம்பு படுக்கை விரிப்பில் இருந்து வெளியே ஊர்ந்து சென்றது. மேலும் பிரியாவின் உடலில் தடம் இருந்ததால், அவரை பாம்பு கடித்திருக்கலாம் என்று எண்ணிய சக பெண் போலீஸ் ரத்னா, உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்களின் ஆலோசனையின்படி பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பாம்பு பிரியாவின் உடலில் ஊர்ந்து சென்றிருக்கலாம் என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com