மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு: குளியல் அறையில் பூட்டி வைத்துவிட்டு தப்பிய பெண் கைது

கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குளியல் அறை கதவை திறந்து அவரை மீட்டனர்.
கைது
Published on

மடிப்பாக்கம்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அய்யப்பன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் (வயது 78). இவரது மனைவி நிர்மலா (74). இவர்களது மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிர்மலாவை கவனிக்க அரியலூரை சேர்ந்த சித்ரா (44) என்பவர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.

10 பவுன் தாலிச்சங்கிலி

சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தபோது, குளியல் அறை குழாய் சரியாக மூடவில்லை எனக்கூறி நிர்மலாவை அங்கு அழைத்துச் சென்ற சித்ரா, அவர் கீழே குனிந்தபோது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தார். பின்னர் நிர்மலாவை குளியல் அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பினார்.

போலீசார்

நிர்மலாவின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குளியல் அறை கதவை திறந்து அவரை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் செல்போன் கோபுர சிக்னல் மூலம் மடிப்பாக்கம் கூட்ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த சித்ராவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகை, செல்போன் மீட்கப்பட்டது. புகார் அளித்த 1 மணி நேரத்தில் நகையை மீட்ட போலீசாருக்கு நிர்மலா நன்றி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com