சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பெண் கைது

1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் உடலுக்குள் தங்கத்தை  மறைத்து கடத்தி வந்த பெண் கைது
தங்கம் பறிமுதல்
Published on

சென்னை,

துபாயில் இருந்து சென்னைக்கு உடலுக்குள் ரூ.1.38 கோடி மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையம்

துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

உடலுக்குள் 'முட்டை' வடிவ காப்ஸ்யூல்கள்

அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எக்ஸ்ரே சோதனையில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் தன் உடலுக்குள் ரகசியமாக 3 முட்டை வடிவ காப்ஸ்யூல்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

24 காரட் தங்கம்

உடனடியாக அவரது உடம்பில் இருந்து அந்த காப்ஸ்யூல்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. பின்னர் நவீன தொழில்நுட்ப முறையில் அவை பிரிக்கப்பட்டன. அதில் இருந்து 1.08 கிலோ எடையுள்ள தூய 24 காரட் தங்கக்கட்டி கிடைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.38 கோடி ஆகும்.

பெண் பயணி கைது

இதனை தொடர்ந்து, 1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட அந்த பெண்ணை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது பலத்த காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை

இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் புள்ளிகள் யார், தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது, என்பது குறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்ட நடவடிக்கை

சட்ட விரோதமாக தங்கம் அல்லது பிற கடத்தல் பொருட்களை தங்களது உடலிலோ, பயண பைகளிலோ மறைத்து எடுத்து வர வேண்டாம் என்று சென்னை சுங்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இவ்வாறு பொருட்களை கடத்தினால் சுங்க சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையையும், நீண்டகால சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com