

சென்னை,
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் ஹசீனா (29 வயது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் வீட்டு வேலை செய்ததாக கூறப்படுகிறது. 2 மாதம் வேலை பார்த்த அவர் திடீரென வேலையில் இருந்து நின்றதாக தெரிகிறது. தொழிலதிபர் வெளியூர் சென்று திரும்பி வந்தபோது வீட்டில் 8 பவுன் தங்க நகை காணாமல் போனதை அறிந்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் ஹசீனாவை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ஹசீனா தான் திருடியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவரிடமும் அவரது கணவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று ஹசீனா தனது வீட்டில் கத்தியினால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.