கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி

திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
Published on

விஷம் குடித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 43). இவரது மனைவி புஷ்பா (34). இவர்களுக்கு கார்த்திகா (10), தீபிகா (8) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக அதிக மது அருந்திய நிலையில் இறந்ததாக கூறப்படுகிறது.

புஷ்பா, கார்த்திகா, தீபிகா 3 பேரும் சில நாட்களாக சோகத்தில் இருந்தனர். துக்கம் தாங்காமல் மனமுடைந்த புஷ்பா நேற்று மதியம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை வாங்கி வந்து அதை 2 மகள்கள் களையும் குடிக்க வைத்து தானும் குடித்தார். அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

நீண்ட நேரமாக அந்த வீட்டில் இருந்து யாரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் புஷ்பாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com