வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி - மாந்திரீக பூஜை செய்த இருவர் கைது

பாதியில் பூஜையை நிறுத்தினால் குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டியுள்ளனர்.
வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி - மாந்திரீக பூஜை செய்த இருவர் கைது
Published on

தென்காசி,

தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மாந்திரீக பூஜை செய்து பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் புதையல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (54 வயது). ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் (47 வயது). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்களுக்கு மாந்திரீகம் தெரியும் எனக்கூறி ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசி பகுதிக்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் உங்களது வீட்டில் புதையல், விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கிறது. இதற்காக மாந்திரீக பூஜை, பரிகாரம் செய்தால் அவை கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கூறினர். இதற்கு பணம் தேவைப்படும் என்றும் தெரிவித்தனர்.

பணம் மோசடி

இதை உண்மை என்று நம்பிய அந்த பெண், 'கூகுள்பே' மூலம் சுமார் ரூ.1.54 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் ரொக்கமாகவும் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பெண்ணின் வீட்டில் பல்வேறு மாந்திரீக பூஜைகளையும் செய்தனர். ஒரு கட்டத்தில் புதையலை எடுத்து தருவதாக கூறிய விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து 2 பேரிடம் கேள்வி எழுப்பினார்.

போலீசில் புகார்

அப்போது அவர்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. பாதியில் நிறுத்தினால் உங்களது குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டினார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவர்கள் தென்காசி போலீசில் புகார் செய்தனர்.

2 பேர் அதிரடி கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com