குடும்பத் தகராறில் கணவன் கன்னத்தில் அறைந்ததால் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு


குடும்பத் தகராறில் கணவன் கன்னத்தில் அறைந்ததால் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு
x

பெண்ணின் கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (49 வயது). டீ கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அருள்மணி (45 வயது). இவர், அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் வார்டனாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அருள்மணி வார்டனாக வேலை செய்யும் அதே விடுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் அவர் குடித்துவிட்டு விடுதியில் உள்ள தங்களது அறைக்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், மனைவியின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தார். இதனால் அருள்மணி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருள்மணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் அருள்மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கொலை ஆகாத மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story