டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Published on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 36). மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்தார்.

நேற்று மாங்கனிகளை பறித்துக் கொண்டு கேசவன் டிராக்டர் ஓட்ட அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து வீட்டுக்கு வந்தனர். ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையின் மீது டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

இதில் நிலைதடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த நிர்மலாவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கேசவன் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா உயிர் இழந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப்பதிவு செய்து நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com