கார் மோதி பெண் பலி

வேலூர் அருகே கார் மோதி பெண் பலியானார்.
கார் மோதி பெண் பலி
Published on

வேலூர் அருகே உள்ள கருகம்புத்தூர் கழனிகாட்டுதெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 58). மணி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் கஸ்தூரி ராணிப்பேட்டையில் உள்ள ஷு கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கஸ்தூரி வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் வந்தார். கருகம்புத்தூர் பஸ் நிறுத்தத்துக்கு எதிர்புறம் இறங்கிய அவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com