வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை.. பாவூர்சத்திரம் அருகே கொடூரம்

பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன். இவருக்கு திருமணமாகி உமா (வயது 37) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். பரமசிவன் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலையில் பரமசிவன் தூங்கி எழுந்ததும் அருகில் இருந்த டீ கடைக்கு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அவரது இரு மகன்களும் இரவில் ஊரின் அருகே நடந்த கபடி போட்டியை பார்த்துவிட்டு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கி உள்ளனர். உமா மட்டும் கீழே தூங்கி உள்ளார்.
உமா தனியாக கீழே இருப்பதை அறிந்து மர்ம நபர் கத்தியுடன் வீட்டினுள் புகுந்து உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். பரமசிவன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது உமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






