கணவர் தரவேண்டிய பணத்துக்காக பெண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை: தமிழக மக்கள் உரிமை கட்சி தலைவர் கைது

கணவர் தரவேண்டிய பணத்துக்காக பெண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்த தமிழக மக்கள் உரிமை கட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.
கணவர் தரவேண்டிய பணத்துக்காக பெண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை: தமிழக மக்கள் உரிமை கட்சி தலைவர் கைது
Published on

சேலம்,

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பத்ரி சீனிவாசன். ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹரிணி (வயது 43). இவர் சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பூமொழி என்கிற முகமது இப்ராகிம் (46) என்பவர், தன்னை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமொழியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தமிழக மக்கள் உரிமை கட்சியின் நிறுவன தலைவராக பூமொழி உள்ளார். அவருக்கும் பத்ரி சீனிவாசனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பத்ரி சீனிவாசனுக்கு மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகள் தெரியும். இதனால் பத்ரி சீனிவாசனை தன்னுடைய தொழிலுக்காக வட மாநிலங்களுக்கு பூமொழி அழைத்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு தாராளமாக பணம் செலவு செய்துள்ளார்.

ஆனால் தொழில் வளர்ச்சி சரியாக அமையவில்லை. இதனால் பூமொழி அவரிடம் திடீரென, தன்னிடம் வாங்கிய ரூ.18 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அவர் நான் அவ்வளவு பணம் உங்களிடம் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி சேலத்திற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற பத்ரி சீனிவாசன் மாயமானார். அவரை தேடி வந்த ஹரிணியை 4 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பூமொழி சித்ரவதை செய்ததும், கத்திரிக்கோலால் ரத்தகாயம் ஏற்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே பத்ரி சீனிவாசன் என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com