ஒட்டுமொத்த பெண்களும் தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர் - ஆதவ் அர்ஜுனா

நம்பிக்கையோடு இருங்கள். கொள்ளை குடும்பம் காணாமல் போகும் என ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒட்டுமொத்த பெண்களும் தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர் - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

தீய சக்தி தி.மு.க-வின் ஊழல் பணம், அடாவடித் தி.மு.க-வினரின் ரவுடித்தனம், இவை இரண்டுக்கும் தலைமைதாங்கும் அந்தக் கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின், அதிகார போதைக்கு, 25 வயதேயான இளம்பெண் பலி கொடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை காவல்துறை அறிக்கை மூலம் அறிந்து கொண்ட ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களும் தீயசக்தி தி.மு.க-விற்கு எதிராகக் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விஷக் கலாசாரத்தை முதன்முதலில் தமிழ்நாட்டில் விதைத்தது தீய சக்தி தி.மு.க! அந்த விஷக் கலாசாரத்தில் ஊறித் திளைத்து முழுவதும் நஞ்சாகிப்போன தி.மு.க-வினர், திருச்சி மாவட்டம், வாழைக்காடு கிராமத்தில், ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைபேசும் ஊழல் வேலையை நூதன முறையில் செய்துள்ளனர்; பணமாகக் கொடுப்பதை கொஞ்சம் மாற்றி, 8 ஆயிரம் ரூபாய்ப் பரிசுப் பொருள் கூப்பன்களாக வாழைக்காடு கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி கொடுத்துள்ளனர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்த பாராம்பரியத்திலிருந்து வந்தவர்களிடம் தமிழ்நாட்டு வாக்காளர்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஊழலில் ஊறித்திளைத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் சுரண்டி, ஆயிரக்கணக்கான கோடிகளில் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துள்ள தீய சக்தி தி.மு.க-வின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், எப்படியாவது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற பதவி வெறியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு பகுதியாக, அவர் கொள்ளையடித்து அள்ளி வைத்துள்ள ஊழல் பணத்தில் கொஞ்சம் கிள்ளிக் கொடுப்பதைப்போல, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கூப்பன் விநியோகம் நடைபெற்றுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி உத்தரவின்படியே ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் இந்தச் செயல் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

"கொள்ளையடிக்கும் பணம் எல்லாம் தன் குடும்பத்திற்கு மட்டும்..." என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதைப்போலவே, அவருடைய தொண்டர்களும் வாழைக்காடு கிராமத்திலும் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்கச் சொல்லி தலைமை கொடுத்த பரிசுக்கூப்பன்களை, முழுமையாக வாக்காளர்களுக்குக் கொடுக்காமல், தி.மு.க-வினரே சுருட்டிக் கொள்ளும் வேலையைச் செய்துள்ளனர். இதை அதே ஊரைச் சேர்ந்த சிந்துஜா என்ற 25 வயதுப் பெண் தட்டிக் கேட்டுள்ளார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அராஜகத் தி.மு.க-வினர், சிந்துஜாவைக் முடியைப் பிடித்து அடித்துக் கீழே தள்ளி, துடைப்பத்தால் அடித்து அவமானப்படுத்திக் காயப்படுத்தி உள்ளனர். தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாத சிந்துஜா, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிந்துஜா மரணத்தின் வடிவம் நமக்குத் தற்கொலையாகத் தெரியலாம். ஆனால், அவரை அந்த முடிவுக்குத் தள்ளியது பேராசையும் அராஜக வெறியும் கொண்ட தி.மு.க-வினர்; பழி-பாவங்களுக்கு அஞ்சாமல், தி.மு.க-வினர் இந்த நாச வேலையில் ஈடுபட்டதற்குக் காரணம், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் தீய சக்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்! அந்தவகையில் பார்க்கப்போனால், சிந்துஜாவின் மரணம் தற்கொலை அல்ல; தீயசக்தி தி.மு.க-வின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்த கொடூரக் கொலை! அதிகார ஆசையும், பணவெறியும் கொண்ட மு.க.ஸ்டாலினினுடைய குடும்பத்தினர் செய்த படுபாதகக் கொலை!

கட்சியதிகாரம், ஆட்சியதிகாரம், கோடி கோடியான ஊழல் பணம் என மொத்தமும் தன் குடும்பத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீய சக்தி தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெறி கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், "தன்னையும் தன் குடும்பத்தையும் இந்தத் தேர்தலில் புறக்கணித்து விடுவார்களோ..." என்ற அச்சமும் அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான், கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழக மக்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளையடித்து வைத்துள்ள லஞ்சப் பணத்தில் கொஞ்சத்தை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அள்ளி இரைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் 25 கோடியில் இருந்து 50 கோடி வரை வாக்காளர்களுக்குப் பணமாக, பரிசுப் பொருட்களாகக் கொடுக்கப்படுகிறது. அவரும், அவருடைய குடும்பமும் ஊழல் செய்து கெட்டுப்போனதைப்போல், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் களங்கப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவில் இந்தப் படுபாதகச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார் தீயசக்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் . அதில் பறிபோன ஒரு உயிர்தான் சிந்துஜா.

தற்போது காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நேர்மையாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட தி.மு.க-வினர் மீது வழக்குப் போட்டுக் கைது செய்துள்ளனர். இதுவே, முன்புபோல காவல்துறை மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், "சிந்துஜா குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்; நோய்க் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டார்" என்றெல்லாம் கதை எழுதி வழக்கை முடித்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட பொய்யும் புரட்டும், ஊழலும் லஞ்சமும், அதிகாரப் பேராசையும், தங்கள் குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்ற சுயநல வெறியும்தான் கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டை சீரழித்தது; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை வறுமைப் புதைகுழியில் தள்ளியது. அவற்றைப் பற்றிய எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தங்கள் கொள்ளைத் தொழிலைத் தொடந்து செய்வதற்கு, தன் மகன் உதயநிதியையும், 'நாளைய தீயசக்தி' முதல்-அமைச்சராக்கும் வேலையில் இறங்கி உள்ளார் 'இன்றைய தீயசக்தி' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்காக, தனியார் நிறுவனங்கள் செய்வதைப்போல, மக்கள் பணத்தை வைத்து ரியாலிட்டி ஷோ, விளம்பர ஷோ என நடத்தி தன்னை நல்லவரைப் போல் அடையாளம் காட்டும் நாடகத்தைக் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழகத்திற்கு திருப்புமுனைத் தரப்போகும் திருச்சியில் இருந்து, தீயசக்தி மு.க.ஸ்டாலினின் குடும்பக் கொள்ளைக்கும், அதிகார வெறிக்கும், அடாவடித்தனங்களுக்கும் இன்னும் ஒரே வாரத்தில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கி, நேற்று முன்தினம் நடந்த சிந்துஜாவின் மரணம் வரை... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராத பழிகளைச் சுமந்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் குடும்பம் இனி எந்தக் காலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவே முடியாது.

நம்பிக்கையோடு இருங்கள்!

கொள்ளை குடும்பம் காணாமல் போகும்!

மு.க. குடும்பத்தின் சர்வாதிகரம் ஒழியும்!

நமது தலைமையில் நல்லாட்சி மலரும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com