அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பட்டினப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பெண்கள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பட்டினப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.வை பெண்கள் முற்றுகையிட்டனர்.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பட்டினப்பாக்கத்தில் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பெண்கள்
Published on

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பட்டினப்பாக்கம் டுமீங்குப்பத்தில் நேற்று தமிழ்நாடு தீ தடுப்பு பணிகள் துறை சார்பில் புயல் அபாய ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. த.வேலு கலந்துகொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார். ஒத்திகை நிகழ்ச்சி முடிந்த பின்னர் த.வேலு, தன்னுடைய காரில் ஏறச்சென்றார். அப்போது, டுமீங்குப்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் அவரை திடீரென முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, சரியான வாழ்வாதார வசதிகள் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகிறோம். அடிப்படை வசதிகள் ஏதும் செய்யவில்லை. எங்கள் பகுதி முழுவதும் அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. கழிவுநீர் பிரச்சினையை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதில்லை என சரமாரியாக குற்றம்சாட்டினர்.

பொதுமக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com