திருவொற்றியூரில் பஸ் போக்குவரத்து கேட்டு பெண்கள் சாலை மறியல்

திருவொற்றியூரில் பஸ் போக்குவரத்து கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூரில் பஸ் போக்குவரத்து கேட்டு பெண்கள் சாலை மறியல்
Published on

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான ராஜாஜி நகர், கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருந்து திருவொற்றியூர் வழியாக தங்கசாலை, பாரிமுனை செல்வதற்கும், மாதவரம், மணலி, மீஞ்சூர் செல்வதற்கும் பக்கிங்காம் கால்வாய் செல்லும் அணுகு சாலை வழியாக செல்லும் பஸ் போக்குவரத்தை நம்பி வந்தனர்.

இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்பட்டதும், அணுகு சாலை வழியாக சென்று கொண்டிருந்த பஸ்கள் மேம்பாலம் வழியாக மணலி சென்று வருகிறது.

இதனால் தங்கள் பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ்களை மீண்டும் அந்த வழியாக இயக்க வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள், புதிய மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com