குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

நெல்லை தச்சநல்லூரில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Published on

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்குட்பட்ட 2-வது வார்டு பகுதியில் கடந்த 2 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் தச்சநல்லூர் பங்களா நடுநிலைப்பள்ளி அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

உடனே மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகள், தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருகின்ற இடத்தில் உள்ள அடைப்பை சரி செய்து உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து பொக்லைன் எந்திரம் உடனடியாக வரவழைக்கப்பட்டு, அடைப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com