

தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி, பஞ்சப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன்களை வழங்கி வருகின்றனர்.
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் பெண்களுக்கு கூப்பனில் ரேசன் கார்டு எண், பெயர் குறிப்பிட்டு வழங்கி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி சில பெண்கள் கூப்பனை எடுத்து கொண்டு கடைகளுக்கு சென்று பொருட்களை கேட்டுள்ளனர்.அப்போது கடைக்காரர்கள் இது போலி கூப்பன் என கூறியதால் பெண்கள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றுள்ளனர்.
காரிமங்கலத்தில் தி.மு.க பிரசார வாகனத்தில் இருந்து கட்டு கட்டாக 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.