

ராமேசுவரம்,
கடல் சீற்றத்தால் சாலை சேதம் அடைவதை தடுக்கும் வகையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி உள்ளது. தனுஷ்கோடி வரையிலும் மத்திய அரசின் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 9 ஆண்டுகளில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முகுந்தராயசத்திரம் கடற்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் அரிச்சல் முனை வரையிலும் அமைக்கப்பட்டுள்ள சாலையின் பாதுகாப்பு கருதியும், கடல் சீற்றம் நீரோட்ட வேகத்தால் சாலை சேதமாவதை தடுக்கும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் கடற்கரை பகுதியில் பாறாங்கற்களை கொண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் சீற்றம் மற் றும் நீரோட்ட வேகத்தால் தெற்கு கடற்கரை பகுதியில் பல இடங்களில் தடுப்பு சுவர் பெயர்ந்து கடலில் இழுத்து செல்லப்பட்டது. இதனிடையே தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும், அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தடுப்பு சுவர்களை கட்டி, கடற்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து கனரக லாரிகள் மூலம் பாறாங்கற்கள் தனுஷ்கோடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அரிச்சல் முனை அருகே தெற்கு கடற்கரை பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
இவை பொக்லைன் எந்திரம் மூலம் வரிசையாக அடுக்கி, கற்கள் சரி வதை தடுக்கும் வகையில் இரும்பு கம்பியால் கட்டி பாக்ஸ் போன்று தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பு சுவர் கட்டும் பணி முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அரிச்சல் முனை சாலை சுற்றி பாக்ஸ் வடிவில் தடுப்பு சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இந்த தடுப்பு சுவரில் நின்று கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.