கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

திருத்தணி, 

திருத்தணி ஒன்றியம் மத்தூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரய்யா (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் வேலு என்பவரின் புது வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரய்யா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஈஸ்வரய்யாவிற்கு மறுபடியும் வலி அதிகமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஈஸ்வரய்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் காலனியை சேர்ந்த முதியவர் குப்பன் (வயது 63). இவர் நேற்று கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்தில் துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com