

திங்கள்சந்தை,
இரணியல் அருகே குளத்தில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மருத்துவமனை கட்டும் பணி
இரணியல் அருகே உள்ள தோட்டியோடு பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திர மாநிலம் ஜகதி என்ற இடத்தை சேர்ந்த பொல்லை கோதண்டராவ் (வயது 51) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் பொல்லை கோதண்டராவ் அருகில் உள்ள நயினார் குளத்திற்கு குளிக்கச் சென்றார். அதன்பிறகு நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து சக தொழிலாளர்கள் குளத்துக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிணமாக மீட்பு
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்துக்குள் இறங்கி தேடினர். அப்போது பொல்லை கோதண்டராவ் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பொல்லை கோதண்டராவ் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை மேற்பார்வையாளர் அனுரூபன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.