கோவை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி

தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை  அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

கோவை,

கோவை வடவள்ளி அருகே உள்ள வேடபட்டி, சுண்டப்பாளையம், ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரவணகுமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்திலிருந்து பிரிந்து, தனது தந்தை சின்னகண்ணன் (65) உடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி மாலை தனது குழந்தைகளைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

மகன் வீடு திரும்பாததால் கவலை அடைந்த சின்னகண்ணன் பல இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் முன்புறத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் சரவணகுமார் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் பெறப்பட்டதும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com