

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65 வயது) கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (60 வயது). இவர்களது மகள்கள் மேனகா (38 வயது), மவுனிகா (25 வயது). மேனகா திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் தாய் வீட்டில் வசித்து வந்தார். மவுனிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
செல்வராஜ் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் பணம் தர விஜயலெட்சுமி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 2 மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
அவர்கள் 3 பேரும் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது விஜயலெட்சுமி மற்றும் அவரது மகள்கள் மீது தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.