

தர்மபுரி,
தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு (32 வயது), தொழிலாளி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு தனியாக இருந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறுமியை அவரது தாயார் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் விசாரணையின் முடிவில் பாபு மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து பாபுவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின் பானு தீர்ப்பளித்தார்.