கீழக்கடையத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை- நண்பரிடம் போலீசார் விசாரணை

கீழக்கடையத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கீழக்கடையத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை- நண்பரிடம் போலீசார் விசாரணை
Published on

கடையம்:

கீழக்கடையத்தில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் சக்திவேல் முருகன் (வயது 42). கூலித்தொழிலாளி.

இவருடைய நண்பர் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (40).

சக்திவேல் முருகன் நேற்று மதியம் தனது நண்பர் ராஜரத்தினத்துடன் கீழபத்து வயல் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு இடத்தில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இடத்திலேயே சக்திவேல் முருகன் உயிரிழந்தார்.

காரணம் என்ன?

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சக்திவேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜரத்தினத்தை போலீசார் பிடித்து, சக்திவேல் முருகன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சக்திவேல் முருகன் மனைவியை, ராஜரத்தினம் அவதூறாக பேசியுள்ளார். இதனை சக்திவேல் முருகன் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது.

கொலையான சக்திவேல் முருகனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com