பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
Published on

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்க வேளாண்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணை பதிவாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் மண்டல இணை பதிவாளர் காந்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் லாரி, சரக்கு வேன் உள்ளிட்ட தேவையற்ற கனரக வாகனங்கள், உபகரணங்கள் வாங்க கூட்டுறவுத்துறை வற்புறுத்துகிறது. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே இதுபோன்ற வாகனங்களை வாங்க வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் ஏற்கனவே வாங்கிய கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்களை அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி இணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு அனைத்து பணியாளர்களும் தொடர் விடுப்பில் சென்றுவிடுவோம் என்று கூறப்பட்டு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com