உடல் நலக்குறைவால் தொழிலாளி சாவு - சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

உடல் நலக்குறைவால் தொழிலாளி பரிதாபமாக இறந்த நிலையில் சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடல் நலக்குறைவால் தொழிலாளி சாவு - சுடுகாட்டு வசதி ஏற்படுத்தி தருமாறு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இறக்க நேரிட்டால் அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்து வந்தனர். சுடுகாட்டுக்கு போதுமான இடம் ஒதுக்கி தர அதிகாரிகளிடம் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முறையிட்டு வந்தனர்.

உடல்கள் அடக்கம் செய்து வந்த இடம் அரசின் வேளாண்மை விவசாய சந்தைப்படுத்துவதற்காக இடமாக ஒதுக்கப்பட்டு அரசு சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கு இடமில்லாததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் மணிமங்கலம், ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த பகுதி மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தற்காலிகமாக உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கான இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்ததையடுத்து கூட்டமாக கூடியிருந்த அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி கூறுகையில்:-

இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் அளவீடு செய்து நிரந்தரமாக இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com