பிளஸ்-1 மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நாளை முதல் 13-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"நடப்பாண்டு மார்ச் மாதம் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் 'எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 - ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு' என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை முதல் 13-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.