

சென்னை,
திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ”தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் விமர்சனம் (criticize) பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோவில்ல மட்டும் இல்ல, சமூகத்திலும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, (Inequality) சமத்துவமின்மை-ஐயும், (oppression) ஒடுக்குமுறை-ஐயும் கடுமையா எதிர்ப்போம்” என கூறினார்.
இந்த நிலையில், சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்ல என்று கி.வீரமணி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;-
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?. சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?. தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.