நகை திருடிய வாலிபர் கைது

சோலார் பேனலை பழுதுபார்ப்பது போல நடித்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகை திருடிய வாலிபர் கைது
Published on

திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். எலக்ட்ரீசியன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசு, வீரபாண்டியன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் ரவுண்டுரோடு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்தனர். அதில் பாண்டியராஜன் வீட்டில் திருடியது மதுரை மாவட்டம் சோழவந்தான் நெடுங்குளத்தை சேர்ந்த முத்துகுமார் (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் வேடசந்தூர் நாககோனானூரில் தாரணி என்பவரின் வீட்டில் சோலார் பேனலை பழுதுபார்ப்பது போன்று நடித்து, வீட்டில் இருந்த 2 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. எனவே 2 இடங்களிலும் அவர் திருடிய நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது மதுரை, திருப்பூர் உள்பட பல ஊர்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com