தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் தங்கை காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் முத்துக்குமார் (26 வயது). கோவில் பூசாரியான இவர் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருடைய தங்கை அபிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
இதனால் முத்துக்குமார் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தனியறையில் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நீண்டநேரமாக முத்துகுமாரின் அறை பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது முத்துக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விரைந்து சென்று, முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






