கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கேபிள் ஒயர் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவரது மகன் முகம்மது பாசில் (24 வயது), படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருந்தார்.
அச்சன்புதூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்றும் மழையும் பெய்ததால் வீடுகளில் சரிவர கேபிள் டி.வி. தெரியவில்லை. எனவே அங்குள்ள தெருவில் கேபிள் டி.வி. ஒயரை சரி செய்வதற்காக முகம்மது பாசில் இழுத்தார். அப்போது கேபிள் ஒயர் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட முகம்மது பாசிலை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே முகம்மது பாசில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






