

கோயம்பேடு,
சென்னை கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில், தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (வயது 25) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
என்னை திருமணம் செய்து கொள்வதாக தமிழரசன் ஆசை வார்த்தை கூறியதால், இருவரும் நெருங்கிப் பழகினோம். அப்போது தமிழரசன், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். பின்னர் திருமணம் குறித்து கேட்ட போது, தமிழரசன் மறுத்ததுடன், என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.