

கள்ளக்குறிச்சி,
குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள க.அலம்பாலம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சங்கீதா (24 வயது). இவருக்கும் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் அரவிந்த்குமார் (30 வயது) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அரவிந்த்குமார், தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கும், அரவிந்த்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அரவிந்த்குமார் குடும்பத்தினரும் சங்கீதாவிடம் பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அரவிந்தகுமார் சங்கீதாவை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சங்கீதா வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இறந்த சங்கீதாவின் தாய் சரசு, கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனது மகள் சாவுக்கு அரவிந்த்குமார், அவருடைய தந்தை சரவணன் (60 வயது), தாய் அஞ்சலை (56 வயது), அக்கா அன்பரசி (35 வயது), உறவினர் அய்யம்பெருமாள் (70 வயது) ஆகியோர் தான் காரணம் எனவும் இவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அய்யம்பெருமாள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அரவிந்த் குமார், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், சங்கீதா வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் முருகன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.