

சென்னை,
கோவிலம்பாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (27 வயது). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி., பி.எட். முடித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு புவனேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின்போது பெண்ணுக்கு 50 பவுன் நகைகளும், மாப்பிள்ளைக்கு 20 பவுன் நகைகளும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காரும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் திருமணத்துக்குப் பிறகு ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குழந்தையின் முதலாவது பிறந்தநாளையொட்டி புவனேஸ்வரியின் பெற்றோர், 1.25 பவுன் சங்கிலி மட்டும் அணிவித்துள்ளனர். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி தனது தந்தை வீட்டின் அருகே உள்ள கோவிலில் திருவிழா நடைபெறுவதால், புவனேஸ்வரி தந்தை வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். அப்போது அவரிடம் தொலைபேசியில் பேசிய ஜானகிராமன், "வீட்டுக்கு வர வேண்டாம். உன் தாய் வீட்டிலேயே இரு" என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி, இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புவனேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளுக்குள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.