

திருவொற்றியூர்,
3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம்பெண், தந்தையுடன் பைக்கில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் பலியானார்.
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், மகேந்திரனுக்கு உடல் நலம் சரியில்லாததால், இன்று மகள் திருநிறைச்செல்வியை பைக்கில் அழைத்துக்கொண்டு, ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பின்னர், திருவொற்றியூர் - எண்ணூர் விரைவுச் சாலையில் பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கடற்கரை ஒட்டிய இந்த சாலையில் பைக் வந்தபோது, எல்லையம்மன் கோவில் அருகே, அதிவேகமாக வந்த சரக்கு லாரி பைக் மீது கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்தனர். பைக்கில் பின்புறமாக இருந்த திருநிறைச்செல்வியின் தலையில் லாரியின் டயர் ஏறியது. சம்பவ இடத்திலேயே அவர் தலை தசுங்கி இறந்தார்.
மகேந்திரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண்முன்னே மகள் இறந்து கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அது பார்ப்போரை கண்கலங்க செய்தது. விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். திருநிறைச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிரிழந்த திருநிறைச்செல்விக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தத்திற்கும், 3 மாதம் கழித்து திருமணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். திருமணக் கனவோடு இருந்த இளம்பெண், இப்படி தந்தை கண்முன்னே விபத்தில் சிக்கி பலியான சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.