

தூத்துக்குடி மாவட்டம், சிறுநாடார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மாதவன்குறிச்சி சத்துணவு மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலை, அவர் விறகு சேகரிப்பதற்காக சிறுநாடார்குடியிருப்பு-பெரியபுரம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், வழி கேட்பது போல பேச்சு கொடுத்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் மல்லுக்கட்டிப் போராடி, அங்கிருந்து ஊருக்குள் ஓடி சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர், அந்தப் பெண் அணிந்திருந்த நகையை தங்கச் செயின் என தவறாக எண்ணிப் பறித்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். விசாரணையில் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டவர் பள்ளிபத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 28) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து யோகேஸ்வரனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.