சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர்.. ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர்.. ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் போலீசாருக்கும்- இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் மீது 6 பிரிவுகளில் வழங்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மறியல் போராட்டம்

தஞ்சையில் நேற்றுமுன்தினம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர், அனுமதியின்றி வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அகற்றிய விளம்பர பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் எனவும் கூறி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட விளம்பர பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தின் போது, வழிவிட கூறி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினருடன் விளார் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 26), திருக்கானூர்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (27) ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

7 பிரிவுகளில் வழக்கு

அப்போது அங்கு நின்ற போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற போது, ஆகாஷ் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆகாசை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தாக்கினார். உடனே ஆகாசும் திருப்பி அப்துல்ரஹீமை தாக்கினார். மேலும் அருகே நின்ற அய்யப்பனும் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டினார்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் ஆகாஷ் மற்றும் அய்யப்பன் இருவர் மீதும், பி.என்.எஸ்., 296 (பி) பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், 115 (2) காயம் ஏற்படுத்துதல், 195 (1) கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொது ஊழியரை தாக்குதல், 221 பொது ஊழியர் தனது பொதுப்பணியை செய்ய இடையூறு செய்தல், 351 (2) மிரட்டுவது, 132 அரசு ஊழியர் தனது கடமையை செய்யும்போது தாக்குதல், 121 அரசு ஊழியர் தனது கடமையை செய்யும்போது அவருக்கு காயம் ஏற்படுத்துதல் ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

போலீசார் விளக்கம்

இந்தநிலையில், போலீசார் வாலிபரை முதலில் அடித்த விவகாரத்தில், போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:-

சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் இளைஞர் வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில்,பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் தலையிட்டு, ஆகாசை அமைதிப்படுத்தினார்.

அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். மேலும், நிலைமை மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை அப்துல்ரஹீம் பயன்படுத்தினார். அவரை அந்த நபரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா போலீஸ், கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேலாளரை தகாதவார்த்தையில் பேசிய புகார் உள்ளது. போலீசார் ஆகாசை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.

இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.

38 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 38 பேர் மீது தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்படி இளைஞர் ஆகாஷ் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கைதான இளைஞர் ஆகாஷ் ஒருநாள் நீதிமன்ற காவலுக்கு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com