தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

மடத்தூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மினிபஸ் டிரைவரை வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் வாலிபர்கள் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் மினிபஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மில்லர்புரம், 3-வது மைல் வழியாக மடத்தூருக்கு மினிபஸ் இயக்கப்படுகிறது. கடந்த மாதம் 5ம்தேதி இந்த பஸ்சை மடத்தூரை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அந்த பஸ்சின் படிக்கட்டில் மடத்தூரை சேர்ந்த ஜீவானந்தம்(19) உள்பட 2 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தார்களாம். இதனை பஸ் டிரைவர் அரவிந்த் கண்டித்து உள்ளார்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து படிக்கட்டில் நின்று தொந்தரவு செய்ததால் 2 பேரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 2ம்தேதி அரவிந்த் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவானந்தம் மற்றும் சிலர் அரவிந்த் வீட்டுக்குள் நுழைந்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தி ஜீவானந்தத்தை கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை பேலீசார் தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com