

சென்னை,
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்டிரல் வந்திருந்தார். அங்கிருந்து கேரளா செல்ல மற்றொரு ரெயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது, பெண்கள் காத்திருப்போர் அறை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்ததால், ஆண்கள் காத்திருப்பு அறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறையில் அந்த பெண் குளிக்க சென்றார். அவர் குளிப்பதை அருகில் இருந்த கழிவறையில் மறைந்திருந்த ஒருவர் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு சக பயணிகள், அந்த நபரை பிடித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் வேலூர் மாவட்டம் கீழந்தூரை சேர்ந்த அருண் (27 வயது) என்பதும், மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.