மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

குளித்து முடித்தவுடன், ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக ஈரமான உடலுடன் சுவிட்சைத் தொட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.
முருகன்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்த சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 29). இவர் இன்று (புதன்கிழமை) தனது வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்தார். குளித்து முடித்தவுடன், ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக ஈரமான உடலுடன் சுவிட்சைத் தொட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளித்துவிட்டு மின் மோட்டாரை நிறுத்தச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com