

திருநெல்வேலி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மருது நகரை சேர்ந்தவர் முத்துகணேஷ் (வயது 22). இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று திருவிழாவில் இருந்த போது முத்துகணேஷ், கூட்ட நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாக திடீரென நிலைதடுமாறி தரையில் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்களும் அவரை உடனடியாக மீட்டு முதலுதவிக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முத்துகணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு விஜயநாராயணம் காவல் நிலைய போலீசார், முத்துகணேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவிற்கு வந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.