

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (வயது 33) என்பவர், எட்டயபுரம் அருகே மினி வேனில் மதுபோதையில் படுத்திருந்தபோது 3 பேரால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகக் கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமி(36), பொன்மாடசாமி(26) மற்றும் மாரிச்செல்வம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "இருக்கன்குடி கோவிலில் நடந்த காதணி விழாவின் போது, பெரியநாயகம் கூடுதலாக மது அருந்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உணவருந்தச் சென்றபோது மோதல் ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த நாங்கள் 3 பேரும் சேர்ந்து, பெரியநாயகம் வேனில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தோம்" என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெரியநாயகத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நிவாரணம் வழங்கக்கோரி முழக்கமிட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடலைப் பெற்றுச் சென்றனர்.