ராமநாதபுரத்தில் பயங்கரம்..சம்பாதித்த பணம் எங்கே போகிறது என கேட்ட கணவன்.. குடும்பத்தில் வெடித்த மோதல்...கொலையுண்ட மனைவி

ஆண்டுக்கு ஒருமுறை 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

ராமநாதபுரத்தில் பயங்கரம்
Published on

மண்டபம்,

ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 48) இவரது மனைவி சர்மிளா (வயது 42) இந்த தம்பதிக்கு 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை

உள்ளூரில் வேலை பார்த்து வந்த செல்ல முத்து, போதிய வருமானம் இல்லாததால் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

இதனால் சர்மிளா தனது குழந்தைகளுடன் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். இதற்கிடையே சர்மிளாவின் தாய் பத்மாவதி என்பவர் ஏற்கனவே துபாய் நாட்டில் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்போது அவர் மகளுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் ராமநாதபுரத்திற்கு வந்திருந்த பத்மாவதி மீண்டும் துபாய் செல்லவில்லை உடல்நலக்குறைவு, சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் இங்கேயே இருந்தார். முன்னதாக செல்ல முத்துவுக்கு மனைவி சர்மிளாவின் நடத்தையில் அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனை காரணம் காட்டி செல்போனில் பலமுறை செல்லமுத்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

பணத்திற்கு உரிய கணக்கு எங்கே?

அதேபோல் துபாயில் வேலை பார்த்து அனுப்பும் பணத்திற்கு செல்லமுத்து உரிய கணக்கு கேட்டு வந்துள்ளார். அதன் காரணமாகவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இப்படி சந்தேகப்படும் கணவரிடம் தன்னால் வாழ முடியாது என்று கருதிய சர்மிளா தனது தாயிடம் கூறிவிட்டு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

சர்மிளா மற்றும் செல்ல முத்துவின் உறவினர்கள், குழந்தைகளின் நலன் கருதி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலமுறை அறிவுரை கூறியும் சந்தேகப்படும் கணவருடன் குடும்பம் நடத்த முடியாது என்று சர்மிளா திட்டவட்டமாக கூறி இருந்தார்.

இதனையடுத்து ராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து சர்மிளா, அவரது தாய் மற்றும் குழந்தைகள் குடியிருந்தனர். இதற்கிடையே சமீபத்தில் துபாயில் இருந்து ராமநாதபுரம் வந்திருந்த செல்லமுத்து, மனைவியின் வீட்டிற்கு வந்து அவரது நடத்தை குறித்து பேசி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் கண்டித்து உள்ளனர். உன்னுடன் வாழபிடிக்காமல்தான் தனது தாயுடன் வசித்து வருகிறார். இப்போதும் இங்கு வந்து சண்டை போடுவது நல்லதல்ல, இங்கே வராதீர்கள் என்று கூறியுள்ளனர்.

மனைவி மீது கடும் ஆத்திரம்

இதனால் ஆத்திரம் அடைந்த செல்ல முத்து மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார் இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் மனைவியின் வீட்டிற்கு செல்லமுத்து சென்றார். அப்போது அவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகி கொண்டு இருந்தார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் சர்மிளாவிடம் தகராறு செய்தார்.

இதனை சர்மிளாவின் தாய் பத்மாவதியும் கடுமையாக கண்டித்தார். நேரம் செல்ல செல்ல வாக்குவாதமாக மாறி செல்ல முத்து மனைவியை தாக்கினார்.

தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற செல்ல முத்து தான் வயிற்றில் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து மனைவி சர்மிளாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சரிந்து விழுந்தார். அதனை தடுக்க வந்த மாமியார் பத்மாவதியையும் விட்டு வைக்காமல் செல்லமுத்து சர்மாரியாக வெட்டினார்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.

போலீஸ் நிலையத்தில் சரண்

பின்னர் வீட்டி விட்டு வெளியே வந்த செல்லமுத்து மனைவி மற்றும் மாமியாரை வெட்டிகொன்ற ரத்தம் வடிந்த வாளுடன் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாய், பாட்டியை இழந்து தந்தையும் சிறைக்கு சென்றுவிட்டதால் ஆதரவற்ற நிலையில் குழந்தைகள் கதறி அழுதனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com