நெல்லையில் வாலிபர் கொலை: தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு

முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது.
வாலிபர் கொலை
Published on

நெல்லை,

நெல்லை நகர் பாறையடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஆவுடையப்பன் (32) மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மர்ம கும்பல் வெறிச்செயல்

பாறையடி பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆவுடையப்பனை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

ரத்த வெள்ளத்தில் பலி

இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த ஆவுடையப்பன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கொலையுண்ட ஆவுடையப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க போலீசார் முயன்றனர். ஆனால், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் உடலை எடுக்க விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com