காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம்: மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர்

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் ஆத்திரம்: மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர்
Published on

விருதுநகர்,

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால், மாணவியின் தந்தையை தெருவில் வழிமறித்து வாலிபர் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தொல்லை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் கிழக்கு காலனியை சேர்ந்தவர் அய்யனார் (38 வயது). இவரது மகள் பள்ளிக்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (21 வயது) என்பவர் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். எனவே பெரியசாமியை அய்யனார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே விரோதம் ஏற்பட்டது.

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெருவில் நடந்து சென்ற அய்யனாரிடம் பெரியசாமி, அவருடைய அண்ணன் அழகுராஜா (24 வயது), அவருடைய மனைவி பேச்சியம்மாள் (23 வயது), உறவினர் கருப்பசாமி (19 வயது) ஆகியோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, அழகுராஜா, கருப்பசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். பெரியசாமியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 17 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com