சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு; குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தது அம்பலம்

சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த வாலிபர், 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார். அவர் குடும்ப பிரச்சினையில் கல்குவாரியில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது.
சிக்கராயபுரம் கல்குவாரியில் குதித்த வாலிபர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு; குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்தது அம்பலம்
Published on

கல்குவாரியில் குதித்த வாலிபர்

மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற விஜயகுமார் (வயது 34). இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு கல்குவாரியில் உள்ள குட்டையில் திடீரென குதித்து விட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த மதுரவாயல் தீயணைப்பு நிலைய வீரர்களும், அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ரப்பர் படகுகள் மூலமும், ஆக்சிஜன் சிலிண்டர் வைத்தும் நீரில் மூழ்கிய விஜயகுமாரை கடந்த 3 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று கல்குவாரி குட்டையில் விழுந்த விஜயகுமாரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். மாங்காடு போலீசார் மீடக்கப்பட்ட விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கல்குவாரியில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் உடலை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் விஜயகுமார், குடும்ப பிரச்சினை காரணமாக கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com