

திருப்பூர்,
திருப்பூர்-மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே அணைபாளையம் பகுதியில் சென்டிரல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் உயர்ரக போதைப்பொருளான ஹெராயின் 210 மில்லி கிராம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் குமார் (வயது 22) மற்றும் கவுதம் குமார் (25) என்பதும், அவர்கள் 2 பேரும் திருப்பூர் கோழிப்பண்ணை பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தின் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சென்டிரல் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்து ஹெராயினை பறிமுதல் செய்தனர்.