

விழுப்புரம்,
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ்(வயது 48). இவர் விழுப்புரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் காளிதாஸ், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தின் அருகில் சம்பவத்தன்று இரவு 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்தனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் இந்த அந்த வாலிபர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதனை காலி மது பாட்டிலில் நிரப்பி திரி போட்டு பற்ற வைத்து அந்த வீட்டின் முன்புற சுவற்றில் வீசி தப்பி சென்று விட்டனர்.
இதில் அந்த பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரவையிட்டனர்.
உடனடியாக இது குறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், வக்கில் வீட்டின முன்பு பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியை சேர்ந்த தயா(21) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக பெட்ரோல் குண்டை தயாரித்ததும், பின்னர் அதனை வெடிக்க செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தயா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தயாவை கைது செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.