

சென்னை
அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
யூடியூபர் மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின் ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்க மாட்டீங்க. செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் பிளாக் அவுட் பண்ணுவீங்க. யூடியூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க. அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்-அமைச்சர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவரால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சூத்திரதாரி என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா அவர்களே ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே?அமலாக்கத்துறை ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் சூத்திரதாரி என அமலாக்கத்துறை கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே? இந்த உண்மைகளை தொடர்புபடுத்தி தானே மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்? அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக மாரிதாஸ் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.