

சென்னை,
உலக மண் தினத்தையொட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்தான் பெரிய பிரச்சினையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், மண் வளம் இழந்தால் அது இதைவிட மிகப்பெரும் பாதிப்புகளை உலகளவில் ஏற்படுத்தும். ஆகவே நாம் நமது கவனத்தை மண் வளம் காப்பதை நோக்கி திருப்ப வேண்டும்.
மண்ணில் உள்ள பல்லுயிர்களை காப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் நாம் எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பது குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும்.
நம் உடலேகூட இந்த மண்ணால் ஆனதுதான். எனவே, மண் வளத்தை மேம்படுத்தாமல் நம் உடலும், மற்ற உயிர்களும் மேம்பட முடியாது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தும் அரசாங்கங்கள்தான் ஆட்சியில் அமர தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.